இப்படித்தான் இருக்கப்போகிறது திமுக.. தலைவராக மு.க.ஸ்டாலினின் முதல் உரை சிறப்பானது.. ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பொதுக்குழுவில் ஆற்றிய முதல் உரையிலேயே மத்திய, மற்றும் மாநில அரசை கொள்கை ரீதியில் கடுமையாக விமர்சனம் செய்து திமுக தனது தனித்துவத்தை இழக்கவில்லை என்பதை தனது பேச்சின் மூலம் உறுதிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின்.
திமுகவின் அடிப்படை கொள்கை என்பது மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகள். திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அறிஞர் அண்ணா, அதன்பிறகு 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ஆகியோர் இந்த கொள்கைகளில் உறுதியாக இருந்தனர்.
இப்போது மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்தக் கொள்கைகள் பின்பற்றப்படுமா, அல்லது காலத்திற்கேற்ப சமரசம் செய்யப்படுமா என்றெல்லாம் வினாக்கள் இருந்த நிலையில், ஸ்டாலினின் இந்த அழுத்தம் திருத்தமான பேச்சு, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்டாலின் மீது விமர்சனங்கள்
ஸ்டாலின் மென்மையான அரசியலை முன்னெடுக்கிறார் என்று சிலரும், பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று சிலரும் விமர்சனப் பார்வையை முன் வைத்த நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையிலேயே அனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டது. திமுக தனது அடிப்படைக் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் பிசகாது என்பதை ஸ்டாலினின் இன்றைய பேச்சு ஆணித்தரமாக அறுதியிட்டு கூறி விட்டது.
திமுகவின் அடிப்படை கொள்கை
திமுகவின் அடிப்படை கொள்கை சுயமரியாதை என்று தெரிவித்த ஸ்டாலின், சுயமரியாதை எனும், முதுகெலும்பு இல்லாத மாநில அரசு தமிழகத்தில் உள்ளது என்று சாடினார். தமிழக மக்களின் நலன்களை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா பெயரில் உள்ள கட்சி என்றார். பகல் கொள்ளையடித்துக்கொண்டுள்ளாார்கள், என்றும், தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிக்க வேண்டியதே நமது முதல் பணி என்றும் கடும் சொற்களை கொண்டு போர் தொடுத்தார் மு.க.ஸ்டாலின்.
மத வெறி ஆட்சி
மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்றும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என்றும், பேசினார் ஸ்டாலின். இதன் மூலம், யூகங்கள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து, திமுகவின் முந்தைய தலைமைகள் பயணித்த பாதையில் நடைபோடப்போவதை முரசறைந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
திமுக வாக்கு வங்கி
ஸ்டாலினின் இந்த பேச்சு திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கப்போவதில்லை என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகவும் இதை பார்க்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.