அடுத்து திமுக ஆட்சி தான் அமையும்: முடிவே செய்துவிட்ட ஸ்டாலின்
சென்னை: அடுத்து திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறு, குறுந்தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில்,

ஆட்சி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இன்னும் சில நாட்கள் தான் உள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மக்கள் முன்வர வேண்டும். அடுத்து அமையும் திமுக ஆட்சியில் மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி வைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்த கோரிக்கைகள் இடம்பெறும். மழைக்கு பிறகு சிறு, குறுந்தொழில் முனைவோர் சந்தித்த பிரச்சனைகளுக்கு கருணாநிதி தலைமையில் அமையும் ஆட்சியில் தீர்வு காணப்படும்.

திமுக ஆட்சி
தொழில் வளர்ச்சிக்கு சிறு, குறுந்தொழில் முனைவோர்களின் பங்கு மிக முக்கியம். திமுக ஆட்சியில் சிறு, குறுந்தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தான் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன, 15 சதவீத மூலதன மானியம், மின்சார கட்டணம் ரத்து என்று சலுகைகள் அளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் டான்சி நிறுவனம் லாபம் ஈட்டி வந்தது.

கமிஷன்
திமுக ஆட்சியில் கமிஷன் முக்கியம் இல்லை, வேலை தான் முக்கியம். ஆனால் தற்போதைய ஆட்சியில் வேலை இல்லை மாறாக கமிஷன் மட்டுமே முக்கியம்.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து மத்திய அரசு துறைகள் உள்பட பலரும் தமிழக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து நீதி விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம்
திமுக ஆட்சிக்கு வந்ததும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணப்புழக்கம் இல்லாததால் தொழில்துறை மந்தமாக ஆகியுள்ளது.

நலவாரியம்
பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற திமுக ஆட்சிக்கு வர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அற்ற ஆட்சி நடக்கும். திமுக ஆட்சி அமைந்த உடன் சிறு, குறுந்தொழில் முனைவோர்களுக்கு நலவாரியம் அமைப்போம்.












Click it and Unblock the Notifications