ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்... ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மீது திமுக புகார்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக போலீஸில் திமுக புகார் கொடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதையடுத்து அவரது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியும், தமிழக முதல்வர் பதவியும் பறி போனது.

அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள் உட்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுவதால், பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆளும்கட்சியினர் தங்கள் மீது வீண் பழிகளைப் போடுவதாகவும், பணத்தை நாங்கள் கொடுப்பது போல வாக்காளர்கள் கையில் திணித்தும், வாகனங்களில் வைத்தும் அவப்பெயர் உண்டாக்குவதாகவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திமுக சார்பில் ஸ்ரீரங்கம் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து உடனடியாக தேர்தல் அதிகாரி மனோகரனை மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இத்தேர்தல் நேர்மையானதாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications