தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கிறது திமுக!- ஜெயலலிதா
சென்னை: அதிமுக அரசின் சாதனைகள் குறித்து திமுகவினர் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
17 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் ஏற்கனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் 3 துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

கைத்தறி, கைத்திறன்,துணிநூல் மற்றும் கதர்த்துறை
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:
கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் மாநில அரசின் பங்கான 4 சதவீதத்தினை, 8 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மல்பரி நடவு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
நவீன புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, கடலூர், வேலூர், திருச்செங்கோடு, சேலம் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள நெசவாளர்களுக்கு ½ குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட 6 ஆயிரம் பெடல் தறிகள் அரசின் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன.
பசுமை வீடுகள் திட்டம்
ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் சங்கங்களின் வகைபாடுகளுக்கேற்ப பதவி நிலை நான்கில் உள்ள காலமுறை ஊதியம் 1-1-2013 முதல் வழங்கப்படுவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சங்கங்களில் உள்ள 25 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகளும், கூடுதலாக நெசவாளர்களுக்கென 10 ஆயிரம் வீடுகளும் கட்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. பஞ்சாயத்திற்கு ஒரு பட்டு விவசாயி-திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:
மாநில அரசால் செயல்படுத்தப்படும் மாநில போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், விடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிட நல விடுதிகள் மற்றும் பழங்குடியின நல விடுதிகளுக்கு, முதற்கட்டமாக 23 விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-1, அதாவது, குரூப்-1 முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கு, அவர்கள் முதன்மைத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற ஏதுவாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு, இதுவரை 32 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பட்டயக் கணக்கர்கள், செலவுக் கணக்கர்கள், தேர்ச்சி பெற்ற பின், அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட தலா 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2013-14-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் 98 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பயிலும் 1,23,895 மாணவர்களுக்கு 4.93 கோடி ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின்விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிப்பதற்காக 2.47 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, 16 மாவட்டங்களைச் சேர்ந்த 906 பழங்குடியின பி.எட். பட்டதாரிகளுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வழிவகை செய்யும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும், ஆக மொத்தம் 260 பள்ளிகளில் 260 நீராவி கொதிகலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:
வன விலங்குகளால் ஏற்படும் உயிர், பயிர், உடமைகள் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ், 2011-12-ம் ஆண்டு முதல் 2014-15-ம் ஆண்டு வரை 14,335 ஹெக்டேர் பரப்பளவில் தேக்கு மரத்தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கவும், பெருமளவிலான பசுமையாக்குதல் திட்டத்தினை செயல்படுத்திடவும், திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் நன்மங்கலம் காப்புகாடு பகுதியில் ரூ.6.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற பதவிகளில் நேரடி நியமனத்திற்கென ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பிட "தமிழ்நாடு வனச்சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அந்த அமைப்பினால் பணியாளர்கள் தேர்வு பணி நடைபெற்று வருகின்றது.
வனத்தோட்டக் கழகம்
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில், 4,500 ஹெக்டேர் பரப்பளவில், மரக்கூழ் தோட்டங்களும், 800 ஹெக்டேர் பரப்பில் உயர் விளைச்சல் ஒட்டு முந்திரி கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம், தேவாளா, பாண்டியார், குன்னூர், சேரன்கோடு மற்றும் நடுவட்டம் கோட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு பகுதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து, புதிய வன உயிரின சரணாலயங்கள் ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவேரி வன உயிரினச் சரணாலயமும், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயமும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், கோடியக்கரை வனஉயிரினச் சரணாலயமும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கொடைக்கானல் வனஉயிரினச் சரணாலயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மரக்கன்றுகள்
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 1018 வருவாய் கிராமங்களில் 1.82 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு 109.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பிற பணிகளுடன் 1,000 கிராமங்களில் 1.02 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications