ரூ570 கோடி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி மோடிக்கு திமுக கடிதம்
சென்னை: சட்டசபை தேர்தலின் போது 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ570 கோடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட ஏராளமான பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். அப்போது திருப்பூர் செங்கபள்ளி அருகே 3 கண்டெய்னர்களில் ரூ570 கோடி ரூபாய் ரொக்கம் பிடிபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதலில் இந்த பணம் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது எனக் கூறப்பட்டது. ஆனால் பணம் தங்களுடையதுதான் என எஸ்.பி.ஐ வங்கி உரிமை கோருவதற்கே 18 மணிநேரம் ஆனது. ஆனாலும் அவர்கள் தந்த ஆவணங்கள் தேர்தல் அதிகாரிகளை திருப்திபடுத்தவில்லை.
இதனிடையே ரூ570 கோடி பணம் குறித்து பல்வேறு தகவல்கள் யூகங்களாக கூறப்பட்டன. மதிமுக பொதுச்செயலர் வைகோ, இது ஜெயலலிதாவின் பணம்தான்; கொடநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது என அடித்துச் சொன்னார்.
பின்னர் ரூ570 கோடியுடன் 3 கண்டெய்னர்களும் கோயம்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டன. கடைசியில் அது வங்கிக் பணம் என அறிவித்து ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த பணம் குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் ரூ570 கோடி பணம் பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதேபோல் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications