செம்பரம்பாக்கம் நீர் திறப்பு: சென்னையில் கருணாநிதி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் நீதி விசாரணைக் கோரி, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன் அறிவிப்பு இன்றி அளவுக்கு அதிகமான நீரை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிட்டதுதான் சென்னை சந்தித்த வெள்ள பிரச்சினைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள திமுக, இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாநிதி தலைமையில், கவர்னர் ரோசய்யாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இருப்பினும், இதுவரை நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே கருணாநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர்.
பேராசிரியர் க.அன்பழகன், மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, தயாநிதிமாறன், பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி, பி.சேகர்பாபு உள்ளிட்ட உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
திமுக கொடியை அசைத்து ஆர்ப்பாட்டத்தை துவங்கிவைத்தார் கருணாநிதி. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அதிமுக அரசு விளக்கம் அளித்தே தீரவேண்டும், வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி செல்ல வேண்டும். ஆற்றங்கரையோர மக்களை சென்னை மாநகருக்குள் மறுகுடியமர்த்த வேண்டும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஸ்டாலினும், கருணாநிதியும் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் வருகை தந்திருந்ததால், பார்க்குமிடமெல்லாம் அக்கட்சியினர் தலைகளும், கொடிகளுமாக தென்பட்டது. நீதி விசாரணை கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.












Click it and Unblock the Notifications