உள்ளாட்சி தேர்தல், காவிரி விவகாரம்: திமுக மாவட்ட செயலாளர்களை சந்தித்த கருணாநிதி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேளையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, திமுகவின் வெற்றி வாய்ப்பு, உள்ளாட்சி பகுதிகளில் பிற கட்சிகளின் பலம் குறித்து கருணாநிதி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
மேலும் காவிரி விவகாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் திமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.