எனக்கு உடல் நிலை சரியில்லை... திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி உருக்கம்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தனக்கும் அன்பழகனுக்கும் உடல்நிலை சரியில்லை என்றும், இந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்தின் சாபக்கேடு நீங்க போராட வேண்டும் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
உடல்நிலை சரியில்லை...
என் உடல் நிலையும், அன்பழகனின் உடல் நிலையும் சரியாக இல்லாத சூழ்நிலை. அன்பழகன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்காக, அவருடைய கவலைகளில் நானும் பங்கேற்கிறேன்.
ஒத்துழைப்பு நல்க வேண்டும்...
இந்த சூழ்நிலையில் அனைவரும், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதற்கு, நீங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி மேற்கொண்டு, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மகத்தான கூட்டம்...
மதுரையில் நடைபெற்ற மக்கள் திரளை, 'டிவி' வாயிலாக பார்க்க முடிந்தது; மகத்தான கூட்டம். அந்த கூட்டத்தின் பொலிவு, அந்தக் கூட்டத்தினால் கட்சி தொண்டர்களிடம் ஏற்படும் எழுச்சி எத்தகையது என்பதை, என்னால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், உணர முடிந்தது.
சாபக்கேடு நீங்க வேண்டும்...
அந்த பொலிவும் வலிவும் தி.மு.க.,வுக்கு என்றும் உண்டு; இன்றும் உண்டு; நாளையும் உண்டு. என் அறிவிப்பை எல்லா தரப்பினருக்கும், பட்டி தொட்டி எங்கும் பரப்பி, எதிர்காலத்தில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்து, திராவிட இயக்கத்தின் தீரர்கள் என நாம் சொல்லிக் கொள்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்திற்கு நேர்ந்துள்ள சாபக்கேடு நீங்க வேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.