வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்த திருவண்ணாமலையில் திமுக எ.வ.வேலு வெற்றி
திருவண்ணாமலை: வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மாறி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக சார்பில் போட்டியிட்ட எ.வ.வேலு 50,400 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிதாக அறிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் திண்டிவனம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டியில் எண்ணப்பட்டு வந்தன. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான உமா மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

9 சுற்றுகள் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மாறி இருப்பதாகவும், அதிகாரிகள் துணையுடன் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும், 5-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. சில தொகுதிகளில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, வாக்கு எண்ணும் பணியை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவினர் கூறினர். தொடர்ந்து, அதிகாரிகளிடம் அதிமுகவினர் புகார் கூறியதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூஜாகுல்கர்னி இதுப்பற்றி அதிமுகவினரிடம் விளக்கமாக எந்த முறை கேடும் நடக்கவில்லை என கூறினார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் ராஜன், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பிவிட்டு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒத்துழைத்தார்.
11வது சுற்றில் இருந்து வேலுவின் வாக்கு சதவிதம் கிடுகிடுவென உயர்ந்தது. 21வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட 50,400 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications