கருத்துக் கணிப்புகளில் ஆதரவு அலை.. உற்சாகத்தில் திமுக + கருணாநிதி!
சென்னை: நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக ஆதரவு அலை வீசி வருவது திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் உற்சாகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர்.
முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். நேற்று தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின.
மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 24 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இதேபோல தெற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 30 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 24 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு இடங்களில் தேமுதிக, பாஜக தலா ஒரு இடத்தில் வெல்லும் என்றும், ஒரு தொகுதியில் திமுக - அதிமுக இடையே சம நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முடிந்துள்ள கருத்துக் கணிப்புகளில் மொத்தம் 114 தொகுதிகளுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 63 இடங்களிலும், அதிமுக 48 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக முன்னணியில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி 3ல் 2 தொகுதிகளிலும், திருப்பூர் 7ல் 2 தொகுதிகளிலும், ஈரோடு 9ல் 7 தொகுதிகளிலும், சேலத்தில் 11ல் 6 தொகுதிகளிலும், நாமக்கல்லில் 6ல் 3 தொகுதிகளிலும், தர்மபுரியில் 5ல் 2 தொகுதிகளிலும், கிருஷ்ணகிரியில் 6ல் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ளது.
அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் திமுக 5 இடத்திலும், விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் திமுக 2 தொகுதியிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் திமுக 4ல் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
திமுகவுக்கு ஆதரவாக வந்துள்ள இந்தக் கருத்துக் கணிப்பு திமுக தலைவர் கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதை நேற்றைய அவரது மதுரை கூட்டத்தின்போது பார்க்க முடிந்தது. கருத்துக் கணிப்பு முடிவு வெளியான மாலை நாளிதழை கையில் மகிழ்ச்சியோடு ஏந்திக் கொண்டு போட்டோவுக்கு போஸும் கொடுத்தார் கருணாநிதி.