3 நாள் கூட்டத்தொடரில் 2 நாட்கள் திமுக எம்.எல்ஏக்கள் வெளியேற்றம் – காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, அமளி நிலவிய நிலையில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் 2வது நாளாக திமுக எம்.எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இரண்டு நாட்களுக்கு முன்னர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலையைப் பற்றி கேள்வி எழுப்பினேன்.
அதற்கு 50 நிமிடம் புள்ளி விபரங்களுடன் முதல்வர் விளக்கம் அளித்தார். நடந்தது, நடக்க இருப்பது அடிக்கல் நாட்டப்பட்டது என்று பட்டியலிட்டார். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. அவற்றை பற்றி இன்று நான் பேச நான் முயற்சி செய்தேன். எனக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நாங்கள் சபாநாயகரிடம் பேச வாய்ப்பு கோரி வலியுறுத்தினோம். ஆனால் எங்களை வெளியேற்றிவிட்டனர்.
சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று பேசிய திமுக சட்டப்பேரவை குழு தலைவர் மு.க. ஸ்டாலின், அவை விதி 110 ன் கீழ் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக முதியோர் உதவித்தொகை பற்றிப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.ஏக்களும், புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications