ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகளிடம் உள்ள ஆதரவை பறை சாற்றிய திமுக அவசர செயற்குழு!
Recommended Video

சென்னை: மு.க.அழகிரி பேட்டியால் எழுந்துள்ள சலசலப்புக்கு நடுவே, திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் உள்ள பலம் தெளிவாக வெளி உலகிற்கு காட்டப்பட்டது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை, அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டிருந்தன.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுவதே கூட்டத்தின் நோக்கம்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசினார்கள். முதலிலேயே, கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின், அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பொதுக்குழுவை என்று கூட்டுவது என்பது குறித்தும் இன்று முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் அளவில் கூட்டத்தை முடித்துக்கொள்ள தீர்மானித்து, அதன்படி நிறைவடைந்தது.
அனைத்து மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலினுக்கு இருக்கும் ஆதரவை பறைசாற்றிவிட்டனர்.












Click it and Unblock the Notifications