வேட்பாளர்கள் விவகாரம்: திமுகவின் 'ஜனநாயக' கலகமும் அதிமுகவின் 'உள்ளடி' குழிபறிப்புகளும்..
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது பகிரங்க எதிர்ப்பு எதுவும் வெளிப்படாத நிலையிலேயே முதல் நாளில் இருந்தே அடுத்தடுத்து 6 முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். திமுகவோ வேட்பாளர்களை வெளியிட்டதுதான் தாமதம்... ஆங்காங்கே பயங்கர கலகம் வெளிப்படையாக வெடித்திருக்கிறது... ஆனால் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்களா? என்பது கேள்வியாக இருக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் கட்டுக்கோப்பான கட்சி; ஜெயலலிதா பிறப்பிக்கும் கட்டளையை ஏற்பதே கடமை என கருதுபவர்கள் அதிமுக தொண்டர்கள் எனக் கூறப்படுவது உண்டு.
ஜெயலலிதாவோ, உளவுத்துறை மற்றும் 'செல்வாக்கு'மிக்க வட்டாரங்களின் தகவல்களை வைத்தே வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். இந்த வேட்பாளர் தேர்வுக்கு பகிரங்கமாக எதிர்ப்புகள் வந்திருக்காது; ஆனாலும் திடீர் திடீரென வேட்பாளர்கள் மாற்றப்பட்டு விடுவார்கள்.

கமுக்க கலகம்
அந்தளவுக்கு 'கமுக்கமாக' கலக வேலைகளை செய்கிறவர்கள் அதிமுகவினர்... அதிமுகவில் அமைச்சர், சிட்டிங் எம்.எல்.ஏ. அல்லது வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருக்கும் ஒருவருக்கு சீட் கிடைக்காவிட்டால் போதும்... வாய்ப்பு கிடைத்த அந்த வேட்பாளரை உண்டு இல்லை என செய்துவிடுகிறார்கள்.... அவர் சீனியராக இருந்தால் என்ன? ஜூனியராக இருந்தால் என்ன? சுவர்களில் ஏன் வேட்பாளர் பெயரை எழுதவில்லை என்றால் "நான்தானே வேட்புமனுத் தாக்கல் செய்வேன்... எனக்கு நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறி வேட்பாளர் வயிற்றில் புளியைக் கரைப்பது; அதற்கு ஏற்றார்போல புகார் மனுக்களை இடைவிடாது தலைமைக்கு அனுப்புவது;
ஊடகங்களில் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக செய்திகளை போடவைப்பது என செய்துவிட்டு 'ஒன்றும் தெரியாத நபர்களாக' அந்த வேட்பாளருடனே வலம் வருவது என சகலவிதமான உள்ளடி குழிபறிப்புகளையும் செவ்வனே செய்வதில் கில்லாடிகள்... இதனால் என்னதான் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நேற்று ஆட்டிப் படைத்திருந்தாலும் இன்று வேட்பாளர்களாகி விட்டதாலேயே பலரும் தூக்கத்தைத் தொலைத்தவர்களாக இருக்கிறார்கள்.

ஜனநாயக "கலகம்"
ஆனால் திமுகவிலே 'கலகங்கள்' அனைத்துமே ஜனநாயக முறைப்படி பகிரங்கமாகவே நடந்தேறும் என்பதைத்தான் கடந்த சில நாட்களாக காணமுடிகிறது. அணைக்கட்டு வேட்பாளரை வெளுத்து வாங்கியிருப்பதே சக திமுக உடன்பிறப்புகள்தான்;

கருணாநிதி வீடு முற்றுகை
பாளையங்கோட்டை வேட்பாளர் மைதீன்கான் கொடும்பாவியை எரித்து கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; உச்சகட்டமாக திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கே ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டும் சென்றிருக்கிறார்கள்... ஆனால் திமுகவின் தலைமையோ அப்படி ஒன்றும் அதிரடியாக வேட்பாளர்களை மாற்றிவிடப் போவதில்லை என்பது போராடுகிற திமுக தொண்டர்களுக்கும் தெரியும்.

சமாதானப் பேச்சு
இந்த போராட்டங்கள் அனைத்தையும் திமுக தலைமை கவனத்தில் கொள்ளும்; தற்போது வாய்ப்பு கொடுக்க முடியாதவர்கள்; வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அடுத்த முறை ஏதேனும் ஒரு வாய்ப்பை தந்து சமாதானப்படுத்திவிடும்; அதற்கேற்க இப்போதே பேச்சுவார்த்தைகளை நடத்தி தேர்தல் வேலைகளைப் பார்க்கச் சொல்லும்... இதுதான் திமுக பார்முலா. தற்போதும் கூட திமுக தலைவர் கருணாநிதி, வேட்பாளர் பட்டியல் குறித்து ரொம்பவே உணர்வுவயப்பட்ட நிலையிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு சமாதானப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications