மு.க அழகிரி 'ஃபோர்காஸ்ட்' வெற்றி... ஸ்டாலின் தலைமைக்கு முதல் பெரும் தோல்வி...!
சென்னை: திமுகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த ஷாக் தோல்விக்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சிகளில் திமுகவினர் இறங்கியுள்ள நிலையில் இந்தத் தேர்தலை முழுக்க முழுக்க தன்னுடைய பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செயல்பட்ட கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் இந்தத் தோல்விக்கான பொறுப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை எங்கெங்கும் ஸ்டாலின் ஆதிக்கம்தான். முழுக்க முழுக்க ஸ்டாலின் கைப்படநடந்த இந்தத் தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருப்பது ஸ்டாலினின் எதிர் முகாமான அழகிரி தரப்புக்கு பெருத்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
கட்சியை விட்டு நீக்கப்பட்டதுமே அழகிரி சொன்னார்.. திமுக தேறாது, ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று. அதை இன்று செய்து காட்டி வி்ட்டது திமுக.
ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின்!
மு.க.அழகிரி நீக்கத்தில்தான் திமுகவில் முதல் பெரும் குழப்பம் வெடித்தது. கூட்டணி தொடர்பாகவும், விஜயகாந்த்தை திமுகவுக்குள் இழுப்பது தொடர்பாகவும் ஸ்டாலின் அழகிரி இடையே மோதல் வெடித்தது. கடைசியில் அது அழகிரி நீக்கத்தில் போய் முடிந்தது. அதன் பிறகு திமுகவில் எல்லாமே ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின்தான்.
ஆனால் வெற்றி கிடைக்கலையே..!
ஆனால் மு.க.ஸ்டாலின் பக்கம் கட்சி முழுமையாக வந்த நிலையில் அவரே நேரடியாக வேட்பாளர்களைத் தேர்வு செய்தார். கட்சியில் முக்கால்வாசி வேட்பாளர்களை தன் ஆதரவாளர்களாகப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் ஒரு இடத்தில் கூட திமுக வெல்லாமல் போயுள்ளது.
பிரசாரம் வேஸ்ட்..!
மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் நன்றாகத்தான் பிரசாரம் செய்தார். ஆனால் போகப் போக திடீரென மாறி விட்டார். அதாவது ஜெயலலிதா ஏதாவது பேசினால் அதையே வைத்து நக்கல், நய்யாண்டி செய்து பேசத் தொடங்கினார். இது மக்களைக் கவரவில்லை என்பதே உண்மை.
செய்தீர்களா.. செஞ்சுட்டாங்கள்ல.. !
மக்களிடம் ஒரே மாதிரி செய்தீர்களா செய்தீர்களா என்று ஜெயலலிதாவைக் கிண்டல் செய்து அவர் பேசிய பேச்சு எடுபடவில்லை. மாறாக, மக்கள் செய்து காட்டி விட்டார்கள்.
அழகிரி .. இழப்புதான்!
அழகிரியை, ஸ்டாலின் சாதாரணமாக எடை போட்டு விட்டார் என்பதும் இந்தத் தேர்தல் தோல்வி மூலம் உறுதியாகியுள்ளது. ஸ்டாலினை விட அழகிரிதான் களப்பணியில் பெஸ்ட் என்பதை திமுகவினரே ஒப்புக் கொள்வார்கள்..
நானே பேசுவேன்.. நானே பேசுவேன்!
மேலும் பிரசாரத்தின்போதும் மு.க.ஸ்டாலினை முதன்மைப் பேச்சாளராக மாறிப் போனதும் கட்சிக்குப் பாதகமாக அமைந்தது. ஆரம்பத்தில், அவர் மட்டுமே பிரசாரம் செய்து பேசி வந்தார். பின்னர்தான் கருணாநிதி பேச வந்தார். நடிகை குஷ்புவையும் சரியாக பயன்படுத்தவில்லை. கடைசிக் கட்டமாகத்தான் பேச வைத்தனர். இதெல்லாம் மைனஸாக அமைந்தன.
முதல் தலைமைக்கு முதல் தோல்வி!
முக.ஸ்டாலின் தலைமையில் சந்தித்த முதல் தேர்தலிலேயே திமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது திமுகவினரை சோர்ந்து போக வைத்துள்ளது.