சட்டசபையிலிருந்து வெளியேற்றம் எதிரொலி... ஆக. 22ல் திமுக பொதுக்கூட்டம்- ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றம் படும்பாடு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின்போது, குண்டுக்கட்டாக, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை சபாநாயகர் தனபால் உத்தரவின்பேரில், அவைக் காவலர்கள் வெளியேற்றினர். இதில், துரைமுருகன் மயக்கம் அடைந்தார். திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர், சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்து, போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் இருந்து ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றம் படும்பாடு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.