எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரட்டும்.. சந்திக்கும் தைரியம் திமுகவுக்கு உண்டு- துரைமுருகன்
சென்னையில் நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் தொடக்கமாக துரைமுருகன் பேசினார்.
துரைமுருகன் பேசுகையில், வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடிஉள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது. பத்திரிகைகளும் ஆவலாக உள்ளன.
தேர்தல் எப்போது வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் கட்சிதான் திமுக. இதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. திமுகவுக்கு பொதுக்குழு என்பது இதயம் போன்றது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம்.
தனது கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் இயக்கம் அல்ல. சாதாரண விஷயத்துகே தலைவர் கலைஞர் நான்கு பேரின் கருத்தை கேட்பது வழக்கம். அப்படிப்பட்ட கழகத்தின் பொதுக்குழு கூடிஉள்ளது. உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அனைவரும் தத்தமது கருத்துக்களை தலைவர் முன்பு எடுத்து வைக்கலாம் என்றார் துரைமுருகன்.