திமுக எரிகிற வீடு... உயிர் தப்பிக்க தொண்டர்கள் தப்பி ஓடுகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
சென்னை: திமுக எரிந்து கொண்டிருக்கிற வீட்டின் நிலையில் இருப்பதாகவும், எனவே உயிர் தப்பிக்க தொண்டர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ‘பாஜகவைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் திமுக குறித்து காரசாரமாக விமர்சனம் செய்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
தி.மு.க.வை பொறுத்த வரை எரிகிற வீட்டுக்கு சமம். எரிகிற வீட்டில் இருந்து உயிர் தப்பிக்க பலரும் குதித்து ஓடுவார்களே அதே போல் வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் வீட்டின் உரிமையாளர் போடும் கூச்சல் பொருள் நிறைந்ததாக இருக்குமா? என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.
மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே எழுச்சி தமிழகத்திலும் உருவாகி இருப்பதை உணர்ந்த காரணத்தால் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடுதான் இது.
ஒரு காலத்தில் பா.ஜனதா கொடி ஊன்ற விடமாட்டேன் என்றவர்தான் கலைஞர். 1999-ம் ஆண்டு அரசியலில் தங்கள் இடத்தை தக்க வைத்து கொள்ள எங்களோடு கூட்டணி வைத்தார்கள். மத்திய மந்திரி சபையிலும் முக்கிய இலாகாக்களை வாங்கினார்கள். அப்போது இனித்தது. மதவாதம் தெரியவில்லை.
நான் தனிப்பட்ட முறையில் தி.மு.க. தலைவர்கள் பலரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்களது கருத்துக்களும், கட்சியின் கருத்துக்களும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை எக்காலத்திலும் வெளியே பேச முடியாது. பேசுவது நாகரீகமாகவும் இருக்காது.
காங்கிரசுக்கு அரசியல் பிழைப்பு நடத்த மதவாதம் என்ற ஒரே மந்திரசொல்தான் உண்டு. மக்களை பிரித்தாளுவதில் காங்கிரசும், தி.மு.க.வும் கைதேர்ந்தவை என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனி இந்த மாய வார்த்தை ஜாலங்கள் மக்களிடம் எடுபடாது.
2004 மற்றும் 2009-ல் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டு சேர்ந்தது. அதன் விளைவாக இலங்கையில் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது. மீண்டும் கூட்டு சேர்ந்தால் தமிழக மக்களை அழிக்கும் திட்டமாகத்தான் அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.