ஏன் கட்சி மாறுகிறார்கள்?: கருணாநிதி தரும் விளக்கம்
சென்னை: கொள்கை காப்பாற்றப் படுகின்ற ஒரு இடம் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்திருக்கின்ற நண்பர்கள் தான், தம்பிமார்கள் தான், இன்றைக்கு இந்த இயக்கத்திலே தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என மதிமுக செயலாளர் திமுகவில் இணைந்த விழாவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் திமுகவில் இணைந்த விழா நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருக... வருக...
மதிமுக வின் மதுரை மாவட்ட முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளரும், மற்றும் அந்த இயக்கத்தின் பல்வேறு உடன்பிறப்புகளும், டாக்டர் சரவணன் அவர்களின் தலைமையில் இன்றைக்கு ஏறத்தாழ 400 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக் கொள்கிற நிகழ்ச்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நம்பிக்கை...
நமது இயக்கத்தின் வலிவையும், பொலிவையும் மேலும் உறுதிப்படுத்தவும், வளர்க்கவும் இந்த நிகழ்ச்சி பயன்படும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்றைக்கு இந்த இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள டாக்டர் சரவணன் உள்ளிட்ட அனைவரையும் நான் மனதார வரவேற்கின்றேன்.

இது தான் காரணம்...
ஒரு கட்சியிலே இருந்து இன்னொரு கட்சிக்கு ஏன் போகிறார்கள்? எதற்காகப் போகிறார்கள்? என்ன காரணத்திற்காகப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம், அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் விடையளிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொள்கை காப்பாற்றப்படுகின்ற ஒரு இடம் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்திருக்கின்ற நண்பர்கள் தான், தம்பிமார்கள் தான், இன்றைக்கு இந்த இயக்கத்திலே தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடரும் விழாக்கள்...
இந்த இடத்தில், இந்த அரங்கத்தில், இதே போன்ற நிகழ்ச்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. எல்லா நிகழ்ச்சிகளும், குறிப்பாக இது போல தங்களை கட்சியிலே இணைத்துக் கொள்கின்ற நிகழ்ச்சிகளாகத் தான், அவர்களை வரவேற்கின்ற நிகழ்ச்சிகளாகத் தான் நடைபெற்றிருக்கின்றன.

வாழ்த்தி வரவேற்கிறேன்...
யாரையும் புறந்தள்ளுகிற நிகழ்ச்சியாக, எந்த நிகழ்ச்சியும் இதுவரை தி.மு. கழகத்தின் சார்பாக இங்கே நடைபெற்றதில்லை. எனவே தான் வந்து சேர்ந்தவர்களை யெல்லாம் நான் இன்றைக்கு வாழ்த்தி வரவேற்கின்றேன்.

மகிழ்ச்சி...
பொதுவாக நான் சமீப காலமாக இது போன்ற நிகழ்ச்சிகளிலே அல்லது கூட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதில்லை. காரணம் என்னுடைய குரல், வலிவாக இல்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் பேச முடியாத நிலையினாலும் பேசுவதில்லை. ஆனால் இன்றைக்கு உங்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியில் பேசத் தலைப்பட்டிருக்கிறேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு....
நான் உங்களுக்கு அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இந்த இயக்கத்தில், இன்று நேற்றல்ல, பல ஆண்டு காலமாக இருந்து, இந்த இயக்கத்தின் கொள்கை களை, கடமைகளை எவ்வளவு கண்ணியமாக நடத்த வேண்டும், எவ்வளவு கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருக்கிறீர்கள். எனவே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்று தாரக மந்திரங்களை அறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு ஞாபகமூட்டிய இன்றைக்கும் அவர்கள் பெயரால் சொல்லப்படுகிற இந்தத் தாரக மந்திரங்களை நாம் நம்முடைய நெஞ்சிலே நிறுத்தி இந்த இயக்கத்தை வளர்க்கும் முயற்சியிலே ஈடுபட விருக்கிறோம்.

மக்கள் பணி...
முதல் பணியாக, நீங்கள் இந்த இயக்கத்தில் வந்து சேருகின்ற நேரத்திலேயே மக்கள் பணி - மக்களுக்கு ஆறுதல் கூறுகிற பணி - தேறுதல் கூறுகிற பணி - மக்களுக்காக எதையும் செய்வோம் என்கிற அளவுக்கு அண்மைக் காலத்திலே பல நகரங்களில், ஊர்களில், கிராமங்களில், வயல்வெளிகளில் புகுந்த பயங்கரமான வெள்ளத்தை சமாளிக்கின்ற, அதை எதிர்த்து வெல்லுகின்ற அந்தப் பணியைச் செய்து முடித்தவர்கள், இங்கே வந்திருப்பவர்களோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இயக்கப் பணிகள்...
அந்தத் தொண்டை தொடர்ந்து பின்பற்றி, நம்முடைய இயக்கப் பணிகளை, நம்முடைய கட்சிக்காக மாத்திரமல்ல, எந்த மக்களுக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ, இந்த இயக்கம் நடை பெற்று வருகிறதோ, அந்தப் பணியை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி, அதிலே வெற்றி பெறுவதற்கு நீங்கள் எல்லாம் பாடுபட வேண்டுமென்று உங்களையெல்லாம் மெத்தப் பணிவன்போடு அழைக்கிறேன்.

400, 4000ஆக வேண்டும்...
இன்றைக்கு ஏறத்தாழ 400 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்திலே சேருகிறீர்கள் என்றால், எதிர்காலத்தில் இந்த 400, நான்காயிரமாக ஆயிற்று என்ற அளவுக்கு உங்களுடைய பணிகளை மேம்படுத்தி, அந்தந்த பகுதிகளிலே இருக்கிற திராவிடர்களை, தமிழர்களை இந்த இயக்கத்திலே சேர்ப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டுமென்று நான் புதிதாக இன்றைக்கு இந்த இயக்கத்திலே சேர்ந்திருக்கின்ற, எங்களுடைய கரத்தை வலுப்படுத்த வந்திருக்கிற நண்பர்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தி திணிப்பை எதிர்ப்போம்...
நீங்கள் அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற இந்த வாசகங்களை மறந்து விடாமல், அண்ணா வழியில் உழைப்பதற்கும், இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கும் நாம் ஒன்றுபட்டிருப்போம், ஒரு குரலில் ஒலிப்போம் என்று கூறி உங்களை யெல்லாம் வருக, வருக - இந்த அரங்கத்திற்கு மாத்திரமல்ல, இந்த அரங்கத்திலே உங்களை அழைக்கின்ற என்போன்றோரின் உள்ளங்களில் எப்போதும் இடம் பெறுக, நீங்கள் பெறுகின்ற இந்த இடம் என்றைக்கும் உங்களால் இழக்க முடியாத இடம், அதற்கு நீங்கள் காப்பாற்ற வேண்டியது, கழகத்தினுடைய மிக முக்கியமான கட்டுப்பாடு என்ற அந்தக் கொள்கை தான்.

தாரக மந்திரம்...
அந்தக் கொள்கையை, இலட்சியத்தைக் கடைப் பிடித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இந்த மூன்று தாரக மந்திரங்களையும் கடைப்பிடித்து, இந்த இயக்கத்தையும் காப்பாற்றி, இந்த இயக்கம் எந்த மக்களுக்காகப் பாடுபடுகிறதோ அந்தத் தமிழ் மக்களையும் காப்பாற்றி, திராவிட மக்களையும் காப்பாற்றி, நாம் இன்று போல் இதே மகிழ்ச்சியோடு என்றென்றும் பணி புரிவோம் என்ற உறுதியை இந்த மேடையிலே நானும் எடுத்துக் கொண்டு, உங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன் என அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications