திமுக வன்முறை கட்சி.. சசிகலாவே பரவாயில்லை.. 'பொர்க்கி' சு.சாமி குற்றச்சாட்டு
சென்னை: திமுக தேசவிரோத மற்றும், வன்முறை கட்சி என்று சசிகலா ஆதரவாளரான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.,
சட்டசபையில் இன்று நடைபெற்ற அமளிக்கு நடுவே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பாஜக ராஜ்யசபா எம்.பியும், சசிகலா ஆதரவாளருமான சு.சாமி கூறுகையில்,
திமுக தேச விரோத மற்றும் வன்முறை கட்சி. திமுகவைவிட சசிகலா பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை எப்படியாவது தமிழக சிறைக்கு அழைத்துவர வேண்டும் என்று விரும்பி லாபி செய்து வருகிறார் சு.சாமி. எனவே சமயம் கிடைக்கும்போதெல்லாம் சசிகலாவை புனிதப்படுத்தி பேச முற்படுகிறார் சு.சாமி.
மேலும், இந்த ஆட்சி கலைந்துவிடக்கூடாது என்ற அதி தீவிர அக்கறையால் அவசரமாக சு.சாமி பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று செய்தி சேனல் தொகுப்பாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முட்டாள்கள். பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுபோன்ற நடவடிக்கையை தடுக்கிறது. சபாநாயகர் விருப்பப்படி சபையை நடத்தலாம்.
தேச விரோத திமுகவின் குண்டாயிசம்தான் சட்டசபையில் வெடித்துள்ளது. தேசபக்தியற்ற திமுக, ஊழல் காங்கிரஸ், கிறிஸ்தவ மதமாற்றுவாதிகள் ஆகியோர் ஓ.பி.எஸ்சுடன் கைகோர்த்திருந்தனர். அவர்களுக்குத்தான் இன்று இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம், 1988ல் சட்டசபையில் அமளி நடைபெற்ற மறு ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.