இறந்தவர் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... முறியடிக்க களம் இறங்கிய தி.மு.க. படை
சென்னை : இறந்தவர்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதை முறியடிக்கவும், இதற்து அதிகாரிகள் துணைபோவதைத் தடுக்கும் பணியில், தி.மு.க. வினர் ஈடுபட்டு வருவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது பற்றிய அறிக்கை தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

அ.தி.மு.க. ஆட்சியின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, உயிரோடு இருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை, இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட நடைபெற்ற முயற்சிகளை முறியடிக்கும் பணிகளில் தி.மு.க. வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 28-11-2008 நாளிட்ட சுற்றறிக்கை எண். 23/BLA/2008/ERS-ன்படி ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் ஒவ்வொரு தேர்தல் வாக்குச் சாவடிக்கும் ஒரு நிலை முகவரை (BLA-2) நியமிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் வருகிற 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அமைந்துள்ள 64,094 வாக்குச் சாவடிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, திராவிட முன்னேற்றக் கழகம் 64,094 வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA-2) நியமனம் செய்து உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது.
ஆளும் அ.தி.மு.க. அரசின் அடாவடித்தனத்தின் காரணமாக அரசு அதிகாரிகள் சிலர், கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட BLA-2 படிவங்களை, இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், பெரும்பாலான படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கழகத் தோழர்கள் தத்தமது பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பாக்கின்றனர்.
அத்துடன், ஆளும் அ.தி.மு.க. ஆட்சியின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, உயிரோடு இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோரை, இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட நடைபெற்ற முயற்சிகளை முறியடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, தேர்தல் விதிகளுக்கு புறம்பாக தமிழக தேர்தல் அதிகாரிகளும் - ஆளும் அ.தி.மு.க.வினரும் செய்து வரும் குளறுபடிகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டிடச் செய்யும் நடவடிக்கைகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டத்திற்கு ஒரு வழக்கறிஞர் வீதம், அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்தில், கழக வழக்கறிஞர்களோடும், நிர்வாகிகளோடும் இணைந்து ஆளுங்கட்சியினர் துணையோடு அரசு அதிகாரிகள் செய்து வரும் தில்லுமுல்லுகளை ஆராய்ந்து, அதுகுறித்த அறிக்கைகளை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
இவ்வாறு தனது அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications