வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது: கருணாநிதி
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெரும் நிதி தேவைப்படுகிறது. தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும். என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது:
அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.

உடன்பிறப்பே, நான் இவ்வாறு கூறிவிட்ட தால், அளித்த நிதியே போதும் என்று நீங்கள் ஆறுதல் கொண்டு விடக் கூடாது. நான் முன்பே எழுதியது போல, நம்முடைய எதிரிகள் என்னென்னவோ செய்து கொல்லைப் புறமாகக் குவித்து வைத்துள்ள பெரு நிதியை எண்ணிப் பார்த்து, தேர்தல் வருவதற்கு இன்னும் இருப்பது ஒரு சில மாதங்களே, அது ஒவ்வொரு தமிழனுடைய தலை எழுத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தல், அதில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், நான் கேட்டவுடன் இல்லையென்று மறுக்காமல் அள்ளிக் கொடுக்கும் உடன்பிறப்புகள் என்னோடு இருக்கிறீர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன். எனவே உங்களிடம் கேட்காமல் இந்த நேரத்தில் நான் வேறு யாரிடம் சென்று கேட்க முடியும்? பணக்காரர்களிடம், தொழில் முதலாளிகளிடம், பல கோடி ரூபாய் வைத்திருப்போரிடம் நான் தேர்தல் நிதி கேட்டுப் பழக்கப்பட்டவன் அல்ல. உடன்பிறப்பே, உன்னிடம்தான் நான் திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறேன்.
நீயும் தவறாமல் கொடுத்துக் கொண்டே வருகிறாய். ஆனால் நம்முடைய எதிரியிடம் குவிந்திருக்கும் பண பலத்தை எண்ணிடும் போது, இப்போது நீ கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, நாட்கள் இன்னும் சிலதான் இருக்கின்றன என்பதையும் மனதிலே கொண்டு, வெட்டி வா என்றால், கட்டி வரும் உள்ளத்தோடு பெருநிதியைக் கொண்டு வந்து கழக நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் இன்றிலிருந்தே நீ முனைப்புக் காட்டிட வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து தொடர்ந்து நேரம்
கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை கழகம் பெற இருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications