ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்ததலைவர்: தீபக் பரபர.. அதிமுகவினர் அதிர்ச்சி!
ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்த தலைவர் என தீபக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவை விட கருணாநிதி சிறந்த தலைவர் என தீபக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை வழிநடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளே போதும் தினகரன் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் பசங்களான தீபா மற்றும் தீபக்கால் இன்று போயஸ் கார்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் மோதலால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சசிகலா கும்பலோடு சேர்ந்துக்கொண்டு தீபக் பணத்துக்காக தனது அத்தையான ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக தீபா குற்றம்சாட்டினார். மேலும் தன்னை திட்டமிட்டு போயஸ்கார்டனுக்கு வரவழைத்து கொல்ல முயன்றதாகவும் அவர் கூறினார்.
ஒப்புக்கொண்ட தீபக்
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபாவின் சகோதரர் தீபக், தான்தான் தீபா அழைத்ததாக ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவின் படத்துக்கு பூஜை செய்யவே தீபாவை அழைத்ததாகவும் அவர் கூறினார்.
தினகரன் தேவையில்லை
மேலும் தமிழகத்தை வழிநடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளே போதும் என்றும் தீபக் கூறினார். ஈபிஎஸ் ஆட்சி சிறப்பாக உள்ளது என்றும் தீபக் புகழாரம் சூட்டினார்.டிடிவி தினகரன் தமிழக அரசியலுக்கும் அதிமுகவுக்கும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
எம்ஜிஆர் பெயரில் ஏன்?
மேலும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் பெயரில் மாதவன் ஏன் கட்சி ஆரம்பித்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமரிடம் முறையிட முடியுமா?
இந்த மோதல் குறித்து பிதமரிடம் முறையிடப் போவதாக தீபா தெரிவித்துள்ளார் என்று கூறிய அவர், குடும்ப சண்டையை எப்படி பிரதமரிடம் முறையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தீபாவும் தானும்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அவர் கூறினார்.
எல்லா சொத்துக்களும் எங்களுக்குதான்
1991ஆம் ஆண்டுக்கு முன் ஜெயலலிதா வாங்கிய அனைத்து சொத்துகளும் தங்களுக்குதான் என்றும் அவர் கூறினார். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற முடிவு செய்தால் ஆதரிப்பேன் என்றும் அவர் கூறினார்.
கருணாநிதி தான் சிறந்தவர்
மேலும் ஜெயலலிதாவை விட திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தலைவர் என்றும் அவர் கூறினார். தன்னை ஜெலலிதாவின் அரசியல் வாரிசு எனக் கூறிக்கொள்ளும் தீபக் ஜெயலலிதாவின் பரம அரசியல் எதிரியான கருணாநிதியை சிறந்த தலைவர் என கூறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.