கருணாநிதி நலமுடன் இருக்கிறார்.. சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ், ஜெயக்குமார் தகவல்!
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என அவரை சந்தித்த துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என அவரை சந்தித்த துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சால் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
மேலும் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுப்பதால் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கோபாலபுரம் இல்லத்தில்
இதைத்தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஓபிஎஸ் தகவல்
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார் என தெரிவித்தார்.
ஜெயக்குமார் தகவல்
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் என்றார். கருணாநிதியின் வீட்டில் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்தோம்.
அடையாளம் கண்டுகொண்டார்
கருணாநிதியை சந்தித்தது அரசியல் நாகரீகம் மற்றும் பண்பாடு. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர்களும் சந்தித்தனர். கருணாநிதி எங்களை அடையாளம் கண்டுகொண்டார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நாகரீக நிகழ்வு
அரசியல் களத்தில் அதிமுகவும் திமுகவும் எலியும் பூனையுமாக உள்ளபோதும் கூட அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என்றதும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் நாகரீக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
குவியும் தொண்டர்கள்
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார். மேலும் ஏராளமான திமுக தொண்டர்களும் கோபாலபுரத்திற்கு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.