40 கார்களில் பிரசாரம்… அமைச்சர், அதிமுக வேட்பாளர் மீது திமுக புகார்
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
ஏற்காடு தொகுதி தேர்தல் பார்வையாளர் பொன் முத்துராமலிங்கம், மூத்த தலைவர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வி.பி.துரைசாமி ஆகியோர் கையெழுத்திட்டு அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, சேலம் எம்.பி. எஸ்.செம்மலை, முன்னாள எம்.பி. பொன்னையன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 40 கார்களில் சென்று பிரச்சாரம் செய்தனர். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் ஆகும்.

இதுதொடர்பாக வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முற்றிலும் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதையே இது காட்டுகிறது. அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எனவே சுதந்திரமாகவும், நியாயமாகவும் ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும். மேலும் அமைச்சர், அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications