திமுக தேர்தல் அறிக்கை ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்: கருணாநிதி தகவல்
சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வந்தார். அந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் 4 கட்டங்களாக நடந்து வந்தது. தற்போது நமக்கு நாமே பயணத்தை தி.நகர் தொகுதியில் நேற்றுடன் நிறைவு செய்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
செய்தியாளர் :- தி.மு.கழகத்தின் சார்பில் பொருளாளர் ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம் இன்றோடு முடிந்திருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு அவருடைய பயணம் எந்தளவிற்கு உறுதுணையாக இருக்கும்?
கருணாநிதி:- மிகவும் உறுதுணையாக இருக்கும். நாட்டு மக்களுடைய நிலையை அறியவும், ஏழை எளியோருக்கு எப்படி துணையாக இருப்பது என்பதை புரிந்து கொள்ளவும், நேரடியாக அவர்களையெல்லாம் சந்தித்து, அதன் காரணமாக பெற்றுள்ள அனுபவத்தை எல்லா தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க தம்பி மு.க.ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பயன்படும்.
செய்தியாளர் :- தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
கருணாநிதி:- இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
செய்தியாளர் :- அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்த போதும் அரசு கவனிக் கவில்லையே?
கருணாநிதி:- அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக போராட்டத்தை கைவிட வேண்டுமென்று நான் அவர்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications