ஆங்கிலத்தில் பேசினால் விமர்சிப்பதா? நடிகர் கருணாஸுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
சென்னை: தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து வந்த திமுக உறுப்பினர் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நடிகர் கருணாஸ் கூறியதற்கு திமுக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் புதன்கிழமை சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் திங்கள்கிழமை தொடங்கியது. சட்டசபையில் 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் பேசும்போது, "தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து வந்த திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதிமுக உறுப்பினர்கள் ஆங்கிலம் தெரியாததால் அதைக் கேட்டு, அமைதியாக அமர்ந்திருந்ததுபோல திமுகவினர் கூறினர். எனக்கு உண்மையில் ஆங்கிலம் தெரியாது' என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக உறுப்பினர்கள் யாரும் அப்படிக் கூறவில்லை என்றும், கருணாஸ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினர்.
ஆனால், கருணாஸ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு பேரவைத் தலைவர் ப.தனபால் மறுத்துவிட்டார். அதனால் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை பேச பேரவைத் தலைவர் அழைத்தார்.
இதையடுத்து பேசிய .ஸ்டாலின், அவையில் ஆங்கிலத்தில் பேசியது தவறு ஒன்றுமில்லை. அதில் சரளமாகப் பேச முடியும் என்பதால் பேசினார். எனவே, கருணாஸ் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
சபாநாயகர், கருணாஸ் தவறாக எதுவும் பேசவில்லை. உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டீர்கள். இதனால் இரண்டும் அவைக் குறிப்பில் இருக்கட்டும் என்றார். இதனை திமுக உறுப்பினர்கள் ஏற்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பின்னர் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினரான கோபிநாத் தெலுங்கில் பேசி, அதற்கு முதல்வர் தெலுங்கில் பதில் அளித்த நிகழ்வுகள் எல்லாம் பேரவையில் நடைபெற்றுள்ளன. சட்டப்பேரவைக்கான விதியில் எந்த மொழியிலும் பேசலாம் என்றுதான் உள்ளது.
சபாநாயகர், நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். அதேசமயம், கருணாஸ் பேசியதிலும் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டும் அவைக்குறிப்பில் இருக்கட்டும் என்றார்.
பிறகு திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனைப் பேச தனபால் அனுமதித்தார். அவர் பேசுகையில், நிதி நிலை தொடர்பான சில வார்த்தைகளை தமிழில் எப்படிச் சொல்வதென எனக்குத் தெரியவில்லை. நான் பொருளாதாரம் படித்ததால், ஆங்கிலத்திலேயே பேசினேன். அதற்காக தமிழ் எனக்குத் தெரியாது என்று அர்த்தம் இல்லை. வேண்டுமானால், கருணாஸுடன் இந்த விவகாரம் தொடர்பாக எந்த மொழியில் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications