பணக்காரர்களிடம் அல்ல தொண்டர்களிடம் நிதி கேட்ட கருணாநிதி: ஒரே மாதத்தில் ரூ.2.20 கோடி வசூல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் கட்சி தொண்டர்கள் தேர்தல் நிதிக்காக ஒரே மாதத்தில் ரூ. 2.20 கோடி அளித்துள்ளனர்.
2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க நான் பணக்காரர்களிடம் அல்ல கட்சி தொண்டர்களாகிய உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன். நீங்கள் தாராளமாக நிதி அளியுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 11ம் தேதி கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து திமுகவினர் கருணாநிதி மற்றும் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் தனித்தனியாக தேர்தல் நிதி அளித்து வருகிறார்கள். ஒரே மாதத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 99 ஆயிரத்து 376 வசூலாகியுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கருணாநிதியிடமும், ஸ்டாலினிடமும் நிதி வழங்கி வருகிறார்கள்.
முன்னதாக ஸ்டாலின், பொதுச் செயலாளர் க. அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் கருணாநிதியை சந்தித்து தலா ரூ.1 லட்சம் நிதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணலை சனிக்கிழமை ஸ்டாலின் நடத்தினார். அப்போது நேர்காணலில் கலந்து கொள்ள வந்தவர்கள் ஸ்டாலினிடம் தேர்தல் நிதி அளித்தனர்.