சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு.. திமுகவினர் சேலத்தில் வன்முறை
சேலம்: திமுகவிலிருந்து பாரப்பட்டி சுரேஷ் நீக்கப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்து ரகளை செய்தனர். அவர்களைப் போலீஸார் அப்புறப்படுத்தினர்.
சேலத்தைச் சேர்ந்தவர் பாரப்பட்டி சுரேஷ். திமுகவில் சர்ச்சைக்கிடமான புள்ளி. இவர் சமீபத்தில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சுரேஷ் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறமுகத்தின் தம்பி மகன் ஆவார். சேலத்தை உலுக்கிய 7 பேர் படுகொலையில் முக்கியக் குற்றவாளி ஆவார். மேலும் பனைமரத்துப்பட்டி ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வந்தார்.
சுரேஷ் நீக்கத்தை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அரியானூர் பகுதியில் அரசு பஸ்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்கினர். இதில் 2 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.