எல்லாம் எடப்பாடிக்கு தெரியும்.. என்னென்ன கூத்து நடக்கப் போகுதுனு பாருங்க! ஆரூடம் சொல்லும் ரகுபதி!
புதுக்கோட்டை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும், அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. சில இடங்களில் டெபாசிட் இழந்ததோடு மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் பகுதியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எஸ்பி வேலுமணி அதிமுக தோற்றத்திற்கு பாஜக கூட்டணி இல்லாததற்கு காரணம் என சொல்லி இருக்க மாட்டார். அவர் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருக்கின்றன. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை சாதாரண ஒரு நிகழ்வை இவ்வளவு பெரிய பிரச்சனை போல எழுப்பி விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?"என கேள்வி எழுப்பினார்.
ரகுபதி: இந்நிலையில் அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள், இன்று கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது.
மகத்தான வெற்றி: இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்றுதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து 40க்கு 40 என்ற சபதத்தை தமிழ்நாட்டில் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
என்ன தகுதி உள்ளது?: எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர். அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது. திமுகவை பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும் விமர்சிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இருக்கிறது என்றால் அதிமுக பற்றி பேசுவதற்கு ரகுபதிக்கு நிச்சயம் தகுதி உண்டு.
பாஜக தமிழிசை: அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம். குற்றவாளிகளை பாஜக சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இன்று தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
பாமகவின் ஓட்டு: பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கி வங்கி பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர பாஜக தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம் அப்படி வரக்கூடியவர்களால் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேற்போம்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications