அம்மா திட்ட சிறப்பு முகாமில் புகுந்து ரகளை செய்த எழும்பூர் திமுக எம்.எல்.ஏ
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமின் போது எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமை நடத்த விடாமல், எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அடியாட்களுடன் வந்து ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.. இதனால் கோரிக்கை மனுக்களை வழங்க வந்த பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த "அம்மா திட்ட சிறப்பு முகாம்" வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இதில், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னை மாவட்டத்தில் புரசைவாக்கம், அமைந்தகரை, அயனாவரம், கிண்டி, வேளச்சேரி ஆகிய 5 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
கிண்டி வட்டம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வேளச்சேரி வட்டம், திருவான்மியூர், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், ஏராளமானோர் பங்கேற்று, சான்றிதழ்களைப் பெற்று பயனடைந்தனர். அயனாவரம் வட்டத்தில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்து, உடனடியாக சான்றிதழ்களை பெற்று சென்றனர்.
அமைந்தகரை வட்டம் அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்று சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றனர்.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் வட்டத்தைச் சேர்ந்த பெரியமேட்டில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில், அம்மா திட்ட சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமிற்கு ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்திருந்தனர். அப்போது, எழும்பூர் தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன், அடியாட்களுடன் வந்து, முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உருவப் படத்தை அகற்றும்படி, அரசு அதிகாரிகளை மிரட்டினார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர், கடும் ரகளையில் ஈடுபட்டனர். தி.மு.க.வினரின் ரகளைக் காரணமாக, 2 மணி நேரத்திற்கும் மேலாக அம்மா திட்ட சிறப்பு முகாம் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. தி.மு.க.வினரின் அராஜகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.