"கோமாளி" என்று சொல்லலாம், தவறில்லை... சபாநாயகர் தனபால் அதிரடி!
சென்னை: கோமாளி என்ற வார்த்தை தவறானதல்ல, பயன்படுத்தக் கூடாத வார்த்தையும் அல்ல என்று தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் நேற்று விவாதத்திற்கு வந்தது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று பேசினார். அப்போது 2011ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தல், அதன் பின்னர் வந்த இடைத் தேர்தல்கள், அதில் அதிமுக பெற்ற வெற்றி குறித்து விலாவாரியாக விளக்கிப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன், 2006 முதல் நடந்த இடைத் தேர்தல்களையும் இணைத்து ஜெயராமன் பேசலாமே என்றார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் அன்பழகனைத் தொடர்ந்து பேச சபாநாயக் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எழுந்து பேசியபடி இருந்தார். இதைப் பார்த்த பொள்ளாச்சி ஜெயராமன், அன்பழகன், கோமாளி போல அடிக்கடி இடைமறிக்கிறார் என்றார்.
இதனால் திமுகவினர் கோபமடைந்தனர். கோமாளி என்று விமர்சிப்பது தவறு, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எழுந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கோமாளி என்பது பயன்படுத்தக் கூடாத வார்த்தை என்றால் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பரிசீலிக்கலாம் என்றார்.
ஆனால் திமுகவினர் ஏற்கவில்லை. சபாநாயகர் இருக்கை முன்பு குழுமி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால் பேசுகையில், தி.மு.க. எம்.எல்.ஏ., துரைமுருகன், 1981 ஏப்., 2ம் தேதி, சட்டசபையில் பேசுகையில், கோமாளி போல பேசுகிறார் என குறிப்பிட்டு உள்ளார். கோமாளி என்ற வார்த்தை, சட்டசபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல; எனவே, அந்த வார்த்தையை சபைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது என, அறிவித்தார்.
இதை திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடி இருந்தனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications