சட்டசபையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பற்றி அதிமுக எம்எல்ஏ பேச்சால் அமளி- திமுகவினர் வெளியேற்றம்!
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் உத்தரவுப்படி திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத் தொடரின் 2-வது நாளான இன்று காலை அரசு ஊழியர்கள் பிரச்சனையை விவாதிக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுக்கவே அனைத்து எதிர்க்கட்சிகளும் அடுத்தடுத்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய விளாத்திகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில கருத்துகளை பதிவு செய்தார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்கண்டேயன் பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகர் இருக்கையை அவர்கள் முற்றுகையிட்டனர்.

கூண்டோடு வெளியேற்றம்
ஆனால் இதனை நிராகரித்த சபாநாயகர் தனபால், தம்மை திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் திட்டினர்; அவர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படும் என உறுதி அளித்தேன். ஆனாலும் முற்றுகையிட்டனர். அதனால் சபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிடுகிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

சபாநாயருக்கு எதிராக கோஷங்கள்
அப்போது சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சபையை விட்டு திமுகவினர் வெளியே வந்தனர்.அடிமுட்டாள் சபாநாயகர் ஒழிக
அய்யய்யோ காணோமே சபாநாயகரை காணோமே
பயந்தாங்கொள்ளி சபாநாயகர் ஒழிக
உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட சபாநாயகர் ஒழிக
என திமுகவினர் சபைவளாகத்தில் ஊடகங்கள் முன்பாக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

சபரீசன் மீது விமர்சனம்
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவின் மார்க்கண்டேயன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது என்னுடைய மருமகன் சபரீசன் பெயரைச் சொல்லி தேவையில்லாத வகையில் ஒரு வார்த்தையை பதிவு செய்தார். அப்படி பதிவு செய்தபோது திமுகவைச் சேர்ந்த நாங்கள் அதனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

சசிகலா பற்றி பேசவா?
மேலும் நான் எழுந்து, சபரீசன் என்னுடைய மருமகன்தான் - அதை ஒப்புக் கொள்கிறேன்; அதே நேரத்தில் ஜெயலலிதா வீட்டில் இருக்கக் கூடியவர் சசிகலா...அவரைப் பற்றி பேசினால் ஒப்புகொள்வீர்களா எனக் கேட்டேன்.உடனே நான் பேசியதை சபை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.

சந்தி சிரித்த தீர்ப்பு
அப்படியானால் மார்க்கண்டேயன் பேசியதையும் நீக்க வேண்டும் என்று போராடினோம்.. சபை முன்னவரிடம் சொன்னோம். ஆனால் எங்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டிருக்கிறார்.
சபாநாயகர் தன்னுடைய தீர்ப்புதான் இறுதித் தீர்ப்பு என்கிறார்... இவர் அளித்த தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்தால் இன்று சந்தி சிரிக்கிறதே என்றார்.












Click it and Unblock the Notifications