திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமாவா? கோர்ட் உத்தரவால் நீடிக்கும் சஸ்பென்ஸ்
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா? என்பது தொடர்பாக ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் நீதிமன்ற உத்தரவால் நீடிக்கிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி தர திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா? என்பது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் தற்போதைய நீதிமன்ற உத்தரவால் தொடர்ந்து நீடிக்கிறது.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் சஸ்பென்ஸ்
அப்போது, திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவு வரட்டும். அதற்கு பின் நடவடிக்கை மேற்கொள்வோம். அதுவரை சஸ்பென்ஸாக இருக்கட்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற உத்தரவுகள்
இதற்கேற்ப இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதற்கு முன்பாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. ஆனால் உயர்நீதிமன்றமோ, நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தடையை நீட்டித்தது; 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்தது; அதேநேரத்தில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவும் தடை விதித்தது என கலவையான உத்தரவுகளை பிறப்பித்தது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து
இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட அதேநேரத்தில் திடீரென திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின் சொன்ன ராஜினாமா தொடர்பான சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

அக்டோபர் 4-ல்?
உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 4-ந் தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. அன்றாவது ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் உடையுமா? அல்லது தொடருமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications