எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக, காங். தலைவர்கள் லியுறுத்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இன்று நேரில் வலியுறுத்தினர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ். முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

தற்போது முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக 21 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இணைந்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவையில் முகாமிட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இந்நிலையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, ஜெ. அன்பழகன், ராஜேந்திரன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது, சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தினர். இதேபோல் காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதாரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபுபக்கர் ஆகியோரும் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications