ஆளுநர் மாளிகை முன் திமுக எம்எல்ஏக்கள் திடீர் சாலை மறியல்
போலீசார் தாக்கியது குறித்து புகார் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
சென்னை: சட்டசபையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது என்று முழக்கமிட்டு திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் குண்டுகட்டாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரையும் போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றியுள்ளனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மு.க. ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவிக்க மு.க. ஸ்டாலின் கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது அவருடன் சென்ற எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மறியல் போராட்டத்தின் போது ஜனநாயகத்தை பறிக்காதே.. போலீஸ் அராஜகம் ஒழிக.. சபாநாயகரை கண்டிக்கிறோம் என்று திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினார்கள். கிண்டி சாலையில் திடீரென திமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications