பேச வாய்ப்பை மறுத்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது துரதிருஷ்டவசமானது... சபாநாயகர் தனபால் வேதனை
சென்னை : வாய்ப்பு தருகிறேன் என்று கூறியும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டது துரதிருஷ்டவசமானது என்றும் இது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-விதியின் கீழ் 2 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் எழுந்து நின்று முக்கிய பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உடனே சபாநாயகர் தனபால், ‘முதல்-அமைச்சர் இன்றைக்கு 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து பேச இருக்கிறார்கள். அதன் பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நீங்கள் பேசலாம்'என்றார்.
ஆனால் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்து அவையில் பேசிய சபாநாயகர் தனபால், ‘வாய்ப்பு தருகிறேன் என்று நான் கூறியும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது துரதிருஷ்டவசமானது, இது எனக்கு வேதனை அளிக்கிறது என்றார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆகியோர் பேசினர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசும்போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக இன்றைக்கு முதல்-அமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications