ஆளுநர் ரவியை இறங்கி அடிக்க முடிவுசெய்த திமுக.. “அடுத்த ஸ்டெப்”: விளக்கும் பத்திரிகையாளர் எஸ்.பி.எல்!
சென்னை : "ஆளுநரை, ஆட்சியில் இருக்கும் கட்சி விமர்சிக்கக்கூடாது என்ற மரபை இதுவரை கடைபிடித்து வந்த திமுக இப்போது ஆளுநருக்கு எதிராக தனது தாக்குதலை வேகப்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது திமுக" என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் பேச்சுக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுகவே போராட்டத்தில் குதித்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஏன் இவ்வாறு பேசுகிறார், ஆளுநரின் பேச்சு பாஜகவுக்கு பலன் அளிக்குமா என்பது பற்றியெல்லாம் இந்தப் பேட்டியில் பேசியுள்ளார் எஸ்.பி.லட்சுமணன்.
கேள்வி : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள் என ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறாரே..
எஸ்பி லட்சுமணன் : ஜனநாயகத்துக்கு விரோதமான மக்கள் விரோத கருத்து. கருத்துகளை வெளியிடுவதற்கும், முடிவுகளை தெரிவிப்பதற்கும் ஆளுநருக்கு என்று வரம்பு இருக்கிறது. மசோதா நிலுவையில் வைக்கப்பட்டிருந்தாலே நிராகரிப்பதாகத்தான் அர்த்தம் என்று சொல்வது நக்கல் கலந்த கருத்து. ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையவே கிடையாது. மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, சட்டமன்றத்தை கொச்சைப் படுத்துவதாகவே பொருள். இப்படி ஒரு ஆளுநர் இனியும் தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்ற கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது.

வைகோ தனது அறிக்கையில் ஒரு விஷயத்தைச் சொன்னார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்க பணம் வாங்கியிருக்கிறார்கள் என்று ஆளுநர் குற்றம்சாட்டினால், ஸ்டெர்லைட்டை ஆதரிக்க ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கினார் என்று மக்கள் கேட்பார்கள் என்றார். மாண்புமிக்க பதவியில் இருக்கும் ஆளுநர் வீதிக்கு வந்து கருத்துச் சொன்னால், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் நானே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தேன் என்கிறார். அப்படியென்றால், பொன்னார் வாங்கிய பணம் எவ்வளவு என ஆளுநர் ரவி சொல்ல வேண்டும்.
கேள்வி : ஆளுநர் ரவி, வெளிநாட்டுப் பணம் வருவதாக குற்றம்சாட்டியிருக்கிறார் என்றால், அதை தடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அரசை விமர்சிப்பதாகத்தானே அர்த்தம்?
எஸ்பி லட்சுமணன் : நிச்சயமாக. ஆளுநர் ரவியின் பேச்சு குறித்து பாஜகவும் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் பாஜகவும் தான் ஆரம்ப காலங்களில் அந்த போராட்டங்களில் பங்கேற்றது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. ஆளுநருக்கு அல்ல. இந்த விவகாரத்தை பொதுவெளியில் ஆளுநர் சொல்வது மரபும் அல்ல. நான் மசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம் எனச் சொல்வதெல்லாம் எள்ளி நகையாடுவது.
அதிகாரம் தன் கையில் இருப்பதாக நினைத்து இவ்வாறு பேசுவது தவறான போக்கு. ஆளுநர் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லையென்றால் அவரைத் திரும்பப் பெறுவது மத்திய அரசுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் நல்லது. இப்படிப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கே இருந்து இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது. அரசியல் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துவிட்டார் ஆளுநர். இது அரசியலுக்கும் நல்லதல்ல, பாஜகவுக்கும் நல்லதல்ல, எந்த வகையிலும் அது பாஜகவுக்கு பலன் அளிக்காது.

கேள்வி : ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக உட்பட திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம் நடத்துவது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மாநிலத்தில் உருவாக்கிவிடாதா?
எஸ்பி லட்சுமணன் : திமுகவுக்கு கொஞ்சம் துணிச்சல் வந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆளுநரை, ஆட்சியில் இருக்கும் கட்சி விமர்சிக்கக்கூடாது என்பது மரபு. அதை இதுவரை கடைபிடித்து வந்த திமுக இப்போது ஆளுநருக்கு எதிராக தனது தாக்குதலை வேகப்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது திமுக. அது எந்தளவுக்குச் செல்கிறது என்று பார்ப்போம். அதிமுகவை பொறுத்தவரை ஆளுநருக்கு எதிராக கருத்துச் சொன்னால் பாஜக தலைமை கோபித்துக்கொள்ளுமோ என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே நினைக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன்.












Click it and Unblock the Notifications