வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஆ.ராசா பெயரில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஸ்டாலின் அறிவிப்பு
நீலகிரி: வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு தொடரவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் தலைமையில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக ரூ.146.23 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறையினரும் இணைந்து மழை உட்பட பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ள நிலையில், இந்தியாவிலேயே மலை பிரதேசங்களில் 700 படுக்கைகள் கொண்ட முதல் அரசு மருத்துவமனையாக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது. இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியினருக்காக பிரத்யேகமாக 50 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்.பிக்கள் பேசினர். மக்களவையில் ஆ.ராசா நெருப்பு பறக்கப் பேசினார். ஆனால், அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டும் பேசினார். ஆனால், எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா என சொல்லவில்லை.
வக்ப் சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார். தமிழ்நாடு சட்டமன்றததில் அறிவிக்கப்பட்டபடி, வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடரப்படும்.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தான் நீட் தேர்வை அனுமதித்தனர். கூட்டணியில் இருந்தபோதும், தேர்தலைச் சந்தித்த போதும், அப்போது நீட் தேர்வு விலக்கு வேண்டும் என ஏன் பாஜகவிடம் கேட்கவில்லை. மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்து இருந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்து இருக்கும்.
தமிழக மாணவர்கள் அக்கறை இருந்தால், நீட் தேர்வில் விலக்கு இருந்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க அதிமுக தயாரா? உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருப்பதால் தான் மக்களால் புறக்கணிக்கப்படுகிறீர்கள்.
சங்ககாலம் தொட்டு, குடியாட்சி காலத்திலும் கோலோச்சும் தமிழகத்தை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது. அதனை விட மாட்டேன்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications