மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைக்கக் கூடாது: தி.மு.க. மகளிர் அணி வலியுறுத்தல்!
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை செயலாளராகக் கொண்ட தி.மு.க. மகளிர் அணி வலியுறுத்தியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநில மகளிர் அணித் தலைவர் காஞ்சனா கமலநாதன் தலைமையிலும்- மாநில மகளிர் அணி புரவலர்கள் எம்.ஏ. நூர்ஜகான்பேகம், விஜயா தாயன்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடைபெற்று முடிந்த தி.மு. கழகத்தின் 14-ஆவது பொதுத் தேர்தலில் கருணாநிதியைத் தலைவராகவும், அன்பழகனை பொதுச்செயலாளராகவும், மு.க.ஸ்டாலினை பொருளாளராகவும் தேர்ந்தெடுத்தமைக்கும் - சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய இரு பெண்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கும் இந்தக் கூட்டம் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பிப்ரவரி 28-ந் தேதி "இளைஞர் எழுச்சி நாளாக" கொண்டாட இக்கூட்டம் விழைகிறது.
மத்திய பா.ஜ.க அரசின் வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித்திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தை கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும்- நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்துவிடும்" என்றும்; இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும் கடந்த 9.1.2015 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இக்கூட்டம் ஆதரிக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தமிழகம் எந்தத் துறையிலும் வளர்ச்சி அடையாததோடு, ஜெயலலிதா ஆட்சியிலும் - அவரது பினாமி ஆட்சியிலும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, தொழில் துறையில் பின்னடைவு, கழக ஆட்சியில் திறக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா போன்ற மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் அ.தி.மு.க அரசை கண்டிப்பதோடு, ஜெயலலிதாவின் பினாமி ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவதும் - பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித் திருப்பதையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து வரும் மதுப் பழக்கம் மிகப்பெரும் சமூகப்பிரச்சினையாக தமிழகத்தில் உருவெடுத்துள்ளது. மதுப்பழக்கம் 2004-05 ஆம் ஆண்டில் 7,371 ஆக இருந்த டாஸ்மாக் மது கடைகள் தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2010-11 ஆம் ஆண்டில் 6,250 ஆக குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு வரை என்றிருந்ததை காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணியாகக் குறைத்தது, புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவித்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,800 ஆக அதிகரித்துள்ளது. மது விற்பனை வளர்ச்சியையே தனது முக்கிய குறிக்கோளாக கருதும் அ.தி.மு.க அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசால் 1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்த கடன் உதவியால் லட்சக்கணக்கான பெண்கள் தொழில் துவங்கி நடத்தும் வாய்ப்பு உருவானது. பா.ஜ.க. ஆட்சியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களை நிறுத்தப் போவதாக அறிவித்திருப்பது பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழகஅரசு உடனடியாக மத்திய அரசினைத் தொடர்பு கொண்டு, இம்முடிவு தமிழ் நாட்டு மகளிரின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் இந்த கூட்டம் கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications