பால் விலை; மின் கட்டண உயர்வு; அக்கறையற்ற அரசு- நவ. 3ல் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து நவம்பர் 3-ம் தேதி திமுகவின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த அக்கட்சித் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று அதிரடியாக ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் பால் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பால் விலை உயர்வை எதிர்த்து நவம்பர் 3ம் தேதி திமுக போராட்டம் நடத்த உள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

வயிற்றில் அடிக்கும் செயல்...
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஏழையெளிய நடுத்தர குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக பால் விலையை லிட்டருக்குப் பத்து ரூபாய் உயர்த்தியுள்ளது. அத்துடன், மின்வெட்டு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை விடும் அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்து மக்கள் கருத்துக் கேட்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளது.

நிவாரண நிதி...
கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையில் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும், அரசின் சார்பில் எவ்வித நிவாரணங்களும் இதுவரை அறிவிக்கப்பட வில்லை.

மக்கள் விரோதப் போக்கு...
தமிழக அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும், பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வரும் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் "ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு" நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பு...
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications