சேலம் மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த திமுக ஆட்சியில் சேலம் மாநகர மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க மேட்டூரிலிருந்து தனி குடிநீர்த்திட்டத்திற்கு ரூ.283 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் சேலம் மாநகர மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்படுகின்றனர்.
மேலும் சேலம் மாநகரில் சாலை வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதிகள் உட்பட மக்களுக்கு அடிப்படை வசதிகளை அதிமுக மாநகராட்சி செய்து தரவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியை கண்டித்து சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ஜி.சூடாமணி, மாவட்டப் பொருளாளர் பி.கோபால், மாநகரச் செயலாளர் எஸ்.டி.கலையமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ப.ரகுபதி, கே.ஏ.டி.தம்பி துரை, சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.