அண்ணா நினைவு தினம்.. 144 தடையை மீறி மெரினாவில் திமுகவினர் பேரணி.. அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்
அண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் பிரமாண்ட பேரணி.. அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின், 48வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் பிரமாண்ட அமைதி பேரணி நடத்தினர்.
அறிஞர் அண்ணா நினைவுதினத்தையொட்டி, சென்னை சேப்பாக்கம் முதல் மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம்வரை திமுக அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.
மெரினாவில் 144 தடை உத்தரவு உள்ள நிலையிலும் பேரணி நடத்துவதிலிருந்து திமுக பின்வாங்கவில்லை. இதையடுத்து இன்று காலை 8.15 மணியளவில் அமைதி பேரணி ஆரம்பித்தது.
ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த அமைதி பேரணி, மெரினாவிலுள்ள அண்ணா சமாதியில் முடிவடைந்ததும், மலர்வளையம் வைத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதில் திமுக பபொதுச்செயலாளர் க.அன்பழகனும் பங்கேற்றார்.