ரெடியாகிவிட்ட திமுக வேட்பாளர் பட்டியல்.. இடதுசாரிகள் வருகைக்காக தாமதம்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்ட போதும் இடதுசாரி கட்சிகளின் வருகைக்காக அது வெளியிடப்படுவது தாமதமாகிறது என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து திமுகவின் வேட்பாளர் பட்டியலும் தயாரானது. இதனிடையே திடீரென அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறினர். இதனால் இடதுசாரிகள், திமுக அணியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகளுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக அணியில் இடதுசாரிகள் இடம்பெற்றால் இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டாலும் ஓரிரு நாட்கள் காத்திருக்குமாறு திமுகவிடம் தெரிவித்துள்ளனர். இதனால் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
25% புதுமுகங்கள்..
திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில் 25% பேர் புதுமுகங்களாக இருப்பார்கள் என்றும் தெரிகிறது.
முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் மற்றும் காந்திசெல்வன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தென்சென்னையில் டி.கே.எஸ். இளங்கோவன்
வடசென்னை எம்.பி.யான டி.கே.எஸ். இளங்கோவன் தென் சென்னையில் நிறுத்தப்படக் கூடும். வடசென்னையில் வழக்கறிஞர் கிரிராஜன் வேட்பாளராகிறார்.
மா.சு.வுக்கு செக்
தென் சென்னையில் நடிகை குஷ்பு அல்லது முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தான் வேட்பாளர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் மா.சுவுக்கு மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் செக் வைத்தாராம். குஷ்புவோ விருப்ப மனுவே கொடுக்கவில்லை. இதனால் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தொகுதி 'டிரான்ஸ்பர்' செய்யப்படுகிறதாம்.
பெரம்பலூருக்கு மல்லுகட்டு
பெரம்பலூர் தொகுதியை கரூர் கண்ணதாசன் என்பவருக்கு கொடுக்க ஆ.ராசா, கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவரும் பரிந்துரைத்திருக்கின்றனர். ஆனால் கே.என். நேருவோ சீமானூர் பிரபுவை நிறுத்த மல்லுக்கட்டியிருக்கிறார்.
கலங்கிய துரைமுருகன்
தனது மகனுக்கு வேலூர் தொகுதியை வாங்கிவிடுவதில் பெரும் போராட்டம் நடத்தினார் துரைமுருகன். ஆனால் முஸ்லிம் லீக் பகீரத பிரயத்னம் செய்து வாங்கிக் கொண்டது. இதனால் கலங்கிப் போனாராம் துரைமுருகன். அப்போது 1980 தேர்தலில் தென் சென்னை தொகுதியை முரசொலி மாறன் கேட்டார். ஆனா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமனும் கேட்டார். அதனால் ஆர். வெங்கட்ராமனுக்கு சீட்டை ஒதுக்க வேண்டும் என்று சொன்னது நானே என்று பழைய வரலாறை சுட்டிக்காட்டி சமாதானப்படுத்தினாராம் கருணாநிதி.
அரக்கோணத்தில் என்.ஆர். இளங்கோ
முன்னாள் அரசு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அரக்கோணத்திலும், தமிழ்நாடு தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரத்னவேலு விருதுநகரிலும் கல்வியாளர் முகமது ஜலீல் ராமநாதபுரத்திலும் திமுக வேட்பாளர்களாக களமிறக்கப்படுகின்றனர்.
நெல்லையில் தேவதாஸ் சுந்தரம்
திருநெல்வேலியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் தேவதாஸ் சுந்தரம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
பொள்ளாச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி
பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கரூரிசில் சின்னசாமி ஆகியோரும் தேனியில் பொன். முத்துராமலிங்கமும் திமுக வேட்பாளர்களாக களமிறங்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அழகிரிக்கும் சீட் இல்லை..ஆதரவாளர்களுக்கும் இல்லை..
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் அவரது ஆதரவு எம்.பிக்களான நெப்போலியன், ரித்தீஷ் மற்றும் ராமலிங்கம் ஆகியோருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது.