ரோட்டோர பஜ்ஜி கடைக்காரிடம் வம்பு வளர்த்த திமுக நிர்வாகி.. புதிய சர்ச்சை
ட்விட்டரில் ஓசி பஜ்ஜி திமுக ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை: ட்விட்டரில் ஓசி பஜ்ஜி திமுக என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தலைமை பொறுப்பை மு.க. ஸ்டாலின் ஏற்ற நாளிலிருந்தே திமுக தொண்டர்கள் அராஜக, அடாவடிகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. கருணாநிதி இருந்தபோது கூட இத்தனை சில்லறை சர்ச்சைகள் திமுகவை சூழ்ந்ததில்லை.
இப்போது அதிகரிக்கக் காரணம், அடுத்து நாம்தான் என்ற சில நிர்வாகிகளின் மனதில் வளர்ந்து வரும் அதிகார போதை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஓசி பிரியாணி திமுக
விருகம்பாக்கம் பிரியாணி கடை சம்பவத்திலிருந்து இது இன்னும் மோசமானது. என்னதான் பிரியாணி கடையில் ஸ்டாலின் தாக்கப்பட்டவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னாலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இந்த சம்பவம் திமுக தரப்பிற்கு ஒரு பெரிய களங்கத்தைதான் உண்டு பண்ணியது. இதனால் "ஓசி பிரியாணி திமுக" என ட்விட்டரில் ட்ரெண்டானது.
பியூட்டி பார்லர் சம்பவம்
இதையடுத்து, திருவண்ணாமலை மொபைல் போன் கடை சம்பவம். இதற்கு பிறகு பெரம்பலூர் பியூட்டி பார்லர் சம்பவம். இந்த சம்பவம் திமுக தலைமையை கொஞ்சம் அதிகமாக எரிச்சலை தந்தது. காரணம், சம்பந்தப்பட்டவர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் என்பதே.
|
ஓசியில் பஜ்ஜி
இந்நிலையில் சாலையோர பஜ்ஜி கடையில் திமுக நிர்வாகி தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க-வினர் ரோட்டு கடையோரம் பஜ்ஜி விற்பவரிடம் அடாவடித்தனம் செய்து ஓசியில் பஜ்ஜியை கேட்பதாக தெரிகிறது. அடிதடியும் நடக்கிறது. இதை ட்விட்டரில் "ஓசி பஜ்ஜி திமுக" என்ற ஹேஷ்டேக் செய்து விட்டனர் வெறுப்பாளர்கள். அது இந்திய அளவில் ட்ரெண்டாகி விட்டது.
|
வெடிகுண்டு முருகேசன்
அதிமுகவாகட்டும், திமுகவாகட்டும், அந்த கழகங்களின் சில நிர்வாகிகள் அராஜக, அடாவடி போக்கில் அப்போதிருந்து இப்போதுவரை இருக்கத்தான் செய்கிறார்கள். குற்ற பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. தலைமை பொறுப்புக்கே இந்த விதி என்றால், கட்சிகள் தீர்மானித்து நியமிக்கும் நிர்வாகிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எனவே இரு கட்சிகளும் அருவா வேலு, செயின் ஜெயபால், வெடிகுண்டு முருகேசன் இது போன்ற ஆட்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது. மீறி வாய்ப்பளித்தால் அந்த கட்சியை இந்த நியமனங்கள் வளர்க்க உதவாது.. மாறாமல் தொலைத்து விடும்.