திமுகவின் செயல் தலைவரானார் ஸ்டாலின்! பொதுக்குழுவில் தீர்மானம்- தொண்டர்கள் உற்சாகம்!!
திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். முதுமை காரணமாக அவரால் முழுமையாக கட்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.
இதையடுத்து கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இன்றைய திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவது உறுதி என கூறப்பட்டது.
இருப்பினும் கருணாநிதியின் உடல்நலக் குறைவை முன்வைத்து ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் திமுக பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக திமுகவின் சட்டவிதி 18-ல் திருத்தம் மேற்கொள்ள இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை க. அன்பழகன் முன்மொழிந்தார். துரைமுருகன் வழிமொழிந்தார். இதையடுத்து திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்டாலின் செயல் தலைவரானதை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.