தூக்குத் தண்டனையை ரத்து செய்க - திமுக தீர்மானம்: மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திருச்சி: இந்தியாவில் தூக்குத் தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திமுகவின் திருச்சி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அதிமுக அரசைக் கண்டித்துத் தீர்மானம் போடப்பட்டது.
கச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய 2ம் நாள் மாநாட்டில் மொத்தமாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் குறித்த சுருக்கமான தொகுப்பு...
- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
- கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்ற மத்திய அரசின் பதில் மனுவுக்கு கண்டனம்.
- இலங்கை மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை ஐ.நா.வில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
- சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும்.
- தூக்குத் தண்டனையை அடியோடு ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
- அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக மீனவர்களை பாதுகாக்க இலங்கை அரசுடன் மத்திய அரசே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
- நெசவாளர்களின் பன்மடங்கு மின்கட்டணம், வரி வசூலிக்கும் அதிமுக அரசுக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
- நெல் கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன்னுக்கு ரூபாய் 3,500 வழங்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2,000 என நிர்ணயித்து தமிழக அரசு வழங்க வேண்டும். பச்சை தேயிலை கொள்முதல் விலையை கிலோ ரூபாய் 25 என நிர்ணம் செய்ய வேண்டும்.
- மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேருக்கும் அதிமுக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- அரிசி மற்றும் பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம் ஒழுங்கு நிலைக்கு திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.