திமுகவில் தொடரும் களையெடுப்பு... ஒன்றியச் செயலர்கள் பதவி பறிப்பு!
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக ஒன்றியச் செயலாளர்கள் பலரது பதவியை திமுக தலைமை அதிரடியாகப் பறித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி 98 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சொற்ப வாக்குகளில் திமுக பல தொகுதிகளை இழந்தும் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஒரு குழு அமைத்தது திமுக தலைமை. இந்த குழுவின் பரிந்துரைப்படி ஒன்றியச் செயலர்கள், மாவட்ட செயலர்கள் பலரது பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்திச் செல்வன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ் ஆகியோரது பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் பல ஒன்றியச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சண்முகம், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் என்.எஸ். சேகர், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆதி.சங்கர் உள்ளிட்டோர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
களையெடுப்பு தொடருமாம்!