சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி? ரகசிய சர்வே எடுக்கும் திமுக
சென்னை: 'பில்டிங் ஸ்டிராங்.... பேஸ்மெண்ட் வீக்' என்று வடிவேலு சொன்ன வசனம் அரசியல் கட்சியினருக்கு நிச்சயம் பொருந்தும். அதனால்தான் செய்தியாளர்கள் மத்தியிலும், பொதுக்கூட்டங்களிலும் வீர வசனம் பேசினாலும், ஏன்யா நான் சரியாத்தான் பேசினேனே என்று அவ்வப்போது தங்களின் சொந்த கட்சிக்காரர்களிடம் கேட்டுகொள்வது வாடிக்கையாகிவிட்டது.
அப்படித்தான் திமுகவும், நாங்கதான் ஜெயிப்போம், அடுத்து ஆட்சியில் அமரப்போவது நாங்கதான் என்று போகுமிடங்களில் எல்லாம் பொருளாளர் ஸ்டாலின் கூறினாலும், தேர்தலி தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி என்று ரகசிய சர்வே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க திமுக முடிவு செய்தது. கூட்டணிக்காக வாசற்கதவை திறந்து வைத்தும் யாரும் வந்தபாடில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்து பிரிந்து போன காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணி பக்கம் வந்தது.
கூடவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணையவே, திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தவிர திமுக கூட்டணிக்கு, 39 சிறிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

தேமுதிக உடன் கூட்டணி
திமுக கூட்டணியில், தேமுதிக இடம் பெற்றால், தமிழகத்தில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று ஸ்டாலின் தரப்பினர் நடத்திய சர்வேயில் தெரியவரவே, பகிரங்கமாவே அக்கட்சிக்கு அழைப்பு விடுத்தது திமுக.

நழுவிய தேமுதிக
திமுகவிற்கு பிடி கொடுக்காத தேமுதிகவோ, தில்லுமுல்லு கட்சி, அதிக தில்லுமுல்லு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறியதோடு தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தது.

திமுகவின் நிலை
விஜயகாந்தின் முடிவினால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஸ்டாலின் கூறினாலும், ஜெயிப்போமா? மாட்டோமா? என்ற ஒருவித உதறல் திமுக தலைவர்களிடையே இருக்கத்தான் செய்கிறது.

ரகசிய சர்வே
எனவே விஜயகாந்த் இல்லாமல் தேர்தலை சந்தித்தால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று ஸ்டாலினிடம் கேட்க, அவரது ஆதரவு தரப்பினர் தமிழகம் முழுவதும் மீண்டும் ரகசிய சர்வே எடுக்கும் பணியை துவக்கி உள்ளனர்.

வெற்றி வாய்ப்பு எப்படி?
தமிழகம் முழுவதும் விஜயகாந்த் இல்லாத சூழல், வெற்றி வாய்ப்பை கொடுக்குமா என்றும்; வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஸ்டாலின் ஆதரவு தரப்பினர்,சர்வே எடுத்து வருகின்றனராம்.

வேட்பாளர் தேர்வு
கட்ட பஞ்சாயத்து, கிரிமினல் வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடாதவர்களுக்கும்; இளைஞர்களுக்கும்; புதியவர்களுக்கும் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், திமுக இம்முறை வெற்றி பெறும் என, ஏற்கனவே சர்வே நடத்திய குழு, திமுக தலைமைக்கு தெரிவித்தது. அதன் அடிப்படையிலேயே, வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.

கார்ப்பரேட் கம்பெனி சர்வே
உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதி... ஆளுங்கட்சிக்கு எதிராக சளைக்காமல் பேட்டி கொடுத்து, அறிக்கை வெளியிடும் கருணாநிதியே இம்முறை கார்ப்பரேட் நிறுவனம் கொடுக்கும் சர்வேயை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார் என்று கருத்து கூறி வருகின்றனர் பெயர் வெளியிட விரும்பாத திமுக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications