விவசாய அமைப்புகள் நடத்தும் ரயில் மறியலுக்கு திமுக ஆதரவு: கருணாநிதி
சென்னை: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விவசாய அமைப்புகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் அக்டோபர் திங்கள் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேரம் தொடர் இரயில் பாதை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவும், பங்கேற்பும் கேட்டு கொடுத்துள்ள கடிதத்தினை ஏற்று, அவர்கள் நடத்தும் ரெயில் பாதை மறியல் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் ஆங்காங்கு இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications