"பழனியில் நடந்தது இந்து விரோத மாநாடு.. உதயநிதி ஒரு சனாதன விரோதி.." பாஜகவின் ஹெச். ராஜா சரமாரி தாக்கு
கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜா, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பழனியில் நடந்தது முருகன் மாநாடே இல்லை என்று விமர்சித்த அவர், முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இந்து விரோத மாநாடு என்றும் சரமாரியாக விமர்சித்தார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாவட்டம் மடத்து தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அப்போது 10 அடி உயரத்தில் குலதெய்வ வழிபாடு காக்கும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் ஹெச். ராஜா திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
கடும் தாக்கு: கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, "தமிழ்நாட்டில் இருக்கும் அரசு இந்து விரோத அரசாக இருக்கிறது. சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி அது ஆன்மிக மாநாடு இல்லை எனப் பேசியிருக்கிறார். அவர் சொன்னது சரிதான். அது ஆன்மீக மாநாடு இல்லை. இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதை இந்துக்கள் நிச்சயம் ஏற்று மாட்டார்கள். சனாதன இந்து தர்மத்தின் எதிரி உதயநிதி ஸ்டாலின்.
இப்போது முதலீடுகளை ஈர்க்க எதோ முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அரசு பணத்தில் தமிழக முதல்வர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போலவே இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படி தான் முதலீடு ஈர்க்க துபாய் செல்வதாகச் சொல்லிக் கொண்டு சென்றார். ஆனால், ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை" என்றார்.
விநாயகர் சதுர்த்தி: தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "இந்த முறை விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, போலீஸ் அதிகாரி யாராவது அத்துமீறினால் தமிழக அரசு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கிரமங்களை எல்லாம் பாஜகவும் இந்து அமைப்பினரும் ஏற்கமாட்டோம். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போம் என்றும் நினைக்காதீர்கள்.
தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர்கள் புதுப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 24 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர் சேர்க்கவுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1 கோடி உறுப்பினர் சேர்க்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்.
மும்மொழி கொள்கை: இங்கு மும்மொழி கொள்கை வேண்டுமா, இரு மொழி கொள்கை வேண்டுமா என்பதை மாணவர்கள்- பெற்றோர்கள் இணைந்து பேசி முடிவு செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் அரசியல் செய்கிறார்கள். திராவிடம் என்றாலே ஊழல், கொள்ளை தான். ஊழல் புகாரில் சிக்கிய பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கிராவல் ஊழலில் சிக்கி உள்ள அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பதவியில் அருகதை இல்லாதவர்.
294 பொறியியல் கல்லூரியில் 980 ஆசிரியர்கள் போலி ஆதார் மூலம் பணியில் சேர்ந்துள்ளனர். இதைக் கூட கவனிக்க முடியாது திராணியற்ற நபராக இருக்கும் பொன்முடி போன்ற ஊழல் பேர்வழிகள், மொழி கொள்கையைப் பற்றி முடிவு செய்வார்களா..
திமுகவினர் நடத்தும் பள்ளிகள்: தமிழ்நாடு முழுக்க சமச்சீர் கல்வியை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். நல்லதுதான்.. ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் இந்த சமச்சீர் கல்வி இல்லையே.. நீங்களே, கருணாநிதியை மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மொழி கொள்கையை விட்டுத் தர மாட்டோம் என்றால் டி.ஆர்.பாலு, ஆற்காடு வீராச்சாமி உள்ளிட்டோர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தட்டும். இல்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications